Saturday, July 4, 2015

பணத்தை இப்படியும் மாற்றலாமே! - ஜான் வெஸ்லி


வருமானம் உயர உயர சுயநலத்தின் அளவும் உயர்ந்துகொண்டே போகிறது. 
வீட்டிற்கு அத்தியாவசியமான பொருட்களை வாங்குவதில் தவறில்லை. ஆனால், ஆடம்பரத்தில் திளைத்து தேவையற்ற பொருட்களை வாங்கி குவிப்பவர்களையே அதிகமாய்ப் பார்க்கிறோம். போதாக்குறைக்கு கொடிய பழக்கங்களுக்கும் இந்த அதிகபட்ச வருமானம், மக்களை இழுத்துச் செல்கிறது.

இங்கிலாந்தில் வசித்த ஜான்வெஸ்லி என்ற மதபோதகர் ஒருகாலத்தில் குறைந்த வருமானம் உடையவராக இருந்தார். ஆண்டு வருமானமே 30 பவுண்டுகள்தான். இதில் 2 பவுண்டை தர்மம் செய்வார். மீதி அவரது தேவைக்கு போதுமானதாக இருந்தது. ஒரு கட்டத்தில் அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆனார். அவரது வருமானமும் மிகமிக உயர்ந்து 1600 பவுண்டை எட்டியது. இதனால் அவர் தனது செலவுகளை உயர்த்திக் கொண்டார். வாழ்க்கை முறையே மாறிவிட்டது. ஏழையாக இருந்தபோது, நடந்ததையெல்லாம் மறந்து விட்டார். தன் வீட்டை அலங்கரித்தார். வரவேற்பறையில் விலையுயர்ந்த படங்களை வாங்கி மாட்டி வைத்தார். சம்பாதித்த பணம் காலியாகும் வரை செலவழித்தார்.
இந்த நேரத்தில் அந்த அறையை சுத்தம் செய்ய வேலைக்கார சிறுமி நுழைந்தாள். அப்போது குளிர்காலம். குளிரைத்தாங்கும் அளவிற்கு உரிய உடையை அவள் அணிந்திருக்கவில்லை. கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. அந்தச்சூழலை பார்த்த ஜான்வெஸ்லி மிகவும் வருத்தப்பட்டார். 

""தேவையற்ற விஷயங்களில் பணத்தை செலவழித்தோமே! அந்த பணத்தில் இவளுக்கு நான்கைந்து கோட் 
எடுத்துக் கொடுத்திருக்கலாமே? இவளைப்போல இந்த பூமியில் எத்தனையோ ஏழை சிறுமிகள் உணவின்றி, உடையின்றி தவித்துக் கொண்டிருப்பார்களே! அவர்களுக்கு உதவிஇருக்கலாமே!'' என்ற எண்ணம் ஏற்பட்டது.
அத்துடன்"கடவுள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்?' என்றும் சிந்தித்தார். பணத்துக்கு அடிமையானதை எண்ணி வெட்கப்பட்டார். அதன்பிறகு மனம் மாறினார். தனக்கு கிடைத்த சம்பளத்தில், முன்பைப்போலவே 28 பவுண்டுக்குள் தனது செலவை நிறுத்திக் கொண்டார். மீதியை ஏழைகளுக்கு கொடுத்து விடுவார்.
தானதர்மம் செய்ததால் இவர் வருமான வரி கட்டவில்லை. அதிகாரிகள் அவரது வீட்டை சோதனையிட்டனர். அதிக வருமானம் இருந்தும் ஏன் வரி கட்டவில்லை? என கேட்டனர். ஆனால், அவரது வீட்டை சோதனையிட்ட பிறகுதான் அங்கு 2 வெள்ளிக்கரண்டிகளைத் தவிர, வேறு எதுவுமே இல்லை என்பது தெரிய வந்தது. இதனால் அவரிடம் வரி வசூலிக்காமல் விட்டுவிட்டனர்.

பணம் நல்லதுதான்! ஆனால், அது தன்னை வைத்திருப்போரை தீமைக்கு இழுத்துச் செல்லும் ஆற்றல் கொண்டது. நமது கையில் பணம் வரும்போது, அத்தியாவசியமான தேவைகளுக்கு போக, மீதி பசியுள்ளவனுக்கு ஆகாரமாக மாற வேண்டும். தாகமுள்ளவனுக்கு பானமாக வேண்டும். அரை நிர்வாணத்துடன் திரிபவர்களுக்கு உடையாக வேண்டும். அனாதை குழந்தைகளுக்கும், கணவனை இழந்தவர்களுக்கும் அது ஆறுதலாக மாற வேண்டும். பார்வையற்றோருக்கு பார்வை கொடுக்கவும், முடமானவர்களுக்கு காலாகவும் மாற வேண்டும்.

0 comments: