Friday, July 3, 2015

கைலாச மகரிஷியின் வாழ்க்கை வரலாறு "கைலாச மகரிஷியின் வாழ்க்கை வரலாறு"

கைலாச மகரிஷி எகிப்திலுள்ள அலெக்சாண்டிரியா பட்டணத்தில் 1594 ஆம் ஆண்டு ஒரு தீவிரமான முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார். முகமது நபியை தீவிரமாக பின்பற்றுபவராக வளர்க்கப்பட்டிருக்கிறார். நல்ல ஆவிக்குரிய ஞானம் வரும்படியாக, தனது 30 ம் வயதில் உலகத்தைத் துறந்து, துறவிபோல் வாழ்ந்து , இரவும் பகலும் தியானத்திலே கழித்திருக்கிறார்.ஆனாலும் அவர் ஆத்துமாவில் கொஞ்சமும் அமைதியோ, சந்தோஷமோ உண்டாகவில்லை.

இப்படி ஆத்தும வருத்தத்தோடு இருக்கையில், ஒரு நாள் ஒரு கிறிஸ்தவ ஊழியர் இந்தியாவிலிருந்து பிரசங்கம் பண்ண எகிப்து வந்திருப்பதாகக் கேள்விப்பட்டு,அவரைப் பார்க்க வேண்டும் என்று மிகவும் விருப்பப்ட்டு பெஞ்சில் அமர்ந்திருக்கையில், எதிர்பாராத விதமாக அந்த பரிசுத்தவான் இவர் முன் தோன்றியிருக்கிறார்.

அவர் இயேசு கிறிஸ்து பற்றி எடுத்து சொல்லி, அவர் இரட்சகர், பாவங்களை மன்னிக்கிறவர், வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களுக்கு இளைப்பாறுதல் தருகிறவர் என்று சில நாட்கள் சத்தியம் சொல்ல, அதைக் கேட்டு, இவர் உள்ளம் இயேசு கிறிஸ்துவின் மேல் இழுக்கப்பட்டு, அவரை இரட்சகராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவுடன் இவர் ஆத்துமா சொல்லி முடியாத சந்தோஷத்தாலும், சமாதானத்தினாலும் நிரம்பி வழிந்திருக்கிறது. இந்த சந்தோஷம் பிறருக்கும் கிடைக்க வேண்டும், பிறகுக்கு சுவிசேஷம் அறிவிக்க வேண்டும் என்று அவர் உள்ளம் பற்றி எரிந்ததால், தனக்கு ஆண்டவரைப் பற்றி சொன்ன பரிசுத்தவானோடு இணைந்து ஊழியம் செய்யும்படி அவருடன் சேர்ந்து கொள்கிறார்.

மகரிஷியை ஆண்டவருக்குள் நடத்திய அந்த பரிசுத்தவான் பெயர் எர்னாஸ் (Yernaus). இவர் பரிசுத்த ஃப்ரான்சிஸ் சேவியரின் (St Francis Xavier 1506-1552) நெருங்கிய உறவினராவார்.எர்னாஸ் இரட்சிக்கப்பட்டவுடன் தன் மாமா ஃப்ரான்சிஸ் சேவியரைப் போல உலகமெங்கும் சென்று சுவிசேஷம் அறிவித்து வந்தார். இவர் இந்தியாவில் பல வருடங்கள் தங்கி ஊழியம் செய்தார். இவர் பேரரசர் அக்பர்(1556-1605), இன்னும் பல பெரிய மதத்தலைவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்.

மன்னர் கான்ஸ்டாண்டைன் காலத்து கிரேக்க மொழியிலான தோல் சுருளில் எழுதப்பட்ட வேதம், ஃப்ரான்சிஸ் சேவியரிடமிருந்து, எர்னாஸுக்கு வந்து அவர் தன் கடைசிக் காலத்தில் தன் சீடனான மகரிஷிக்கு கொடுத்துச் சென்றார். எர்னாஸுடன் பல வருடங்கள் இணைந்து ஊழியம் செய்த மகரிஷியை, ஆவியானவரின் நடத்துதல் படி தனியே பிரிந்து போய் ஊழியம் செய்யும்படி குரு எர்னாஸ் வலியுறுத்த, அவரும் அப்படியே அடுத்த 75 வருடங்கள் பல ஊர், பல நாடுகள் சுற்றித் திரிந்து ஊழியம் செய்திருக்கிறார். அதனால் அவருக்கு 21 மொழிகள் சரளமாக பேசத் தெரியும்.

105 வயதானபோது, முன்போல் தீவிரமாக அலைந்து ஊழியம் செய்ய சரீரம் இடங்கொடுக்காததால், எஞ்சியுள்ள வாழ்நாட்களை ஓரிடத்தில் தங்கி ஜெபத்தில் கழிக்கலாம் என்று நினைத்து, அவர் ஊழியம் செய்யும்போது அவரை கவர்ந்த அழகான, அமைதியான கைலாய பர்வதம் (இமயமலை) ஞாபகம் வர அங்கே வந்து ஒரு குகையில் தங்கி அங்கிருக்கும் மூலிகைகள், கீரை, பழங்களைத் தின்று வாழ்ந்திருக்கிறார். குளிர்காலத்தில் கரடிகள் குகைக்குவர இவரும் கரடிகளும் ஒன்றாய் படுத்துக்கொள்வார்களாம்!

இப்படியே சில வருடங்கள் போக,எடுத்துக் கொள்ளும்படி ஆண்டவரை நோக்கித் தீவிரமாக ஜெபிக்க, ஒரு நாள் செட்டைகள் அடிக்கும் சத்தம் கேட்டிருக்கிறது. இவரது ஆன்மீகக் கண்கள் திறக்கப்பட, பல தேவ தூதர்கள் இவர் இருந்த குகைக்கு இறங்கி வருவதைக் கண்டிருக்கிறார், பின்னால் இயேசு கிறிஸ்துவும் வந்திருக்கிறார். அவர் சொன்னது - 'மகனே, என் வருகை சீக்கிரத்தில் சம்பவிக்கப்போகிறது. அதுவரை நீ உலகத்தில்தான் இருக்க வேண்டும். உனக்கு மரணமில்லா சரீரம் இன்றிலிருந்து அளிக்கப்படுகிறது. பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட இதயமும் கொடுக்கப்படும்.சரீரம் இங்கிருக்க ஆவியில் பூமியில் எங்கும் சென்று சபையின் நிலையறிந்து மக்களுக்காக மன்றாடுவதே உன் பணி' என்று சொல்லி ஆண்டவர் மறைந்து விடுகிறார்.

அன்றிலிருந்து இன்றுவரை மகரிஷி அந்த வேலைதான் செய்து வருகிறார். அவரது பெயர் என்ன என்று சாது சுந்தர் சிங் கேட்டதற்கு, ‘ முன்பு சாதாரன மனிதனாய் இருந்த போது எனக்கு ஒரு பெயர் இருந்தது. இப்ப SIN போய் SON முழுமையாக உள்ளிருப்பதால் என் பெயர் கிறிஸ்டியன் (Christian) ’ என்று சொன்னாராம்.


"மரணத்தின் பின் சம்பவிப்பது என்ன? - கைலாச மகரிஷி"

இறந்தவுடன்(ஆவி/ஆத்துமா, சரீர பந்தம் துண்டிக்கப்பட்ட) சில நிமிடங்களுக்கு ஆவிக்கு இறந்து விட்டோம் (சரீரம் இறந்து விட்டது) என்று தெரியாமல்தான் இருக்கும். இறந்தும் உயிருடன் இருக்கும் இந்த புது அனுபவம் அதற்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கும். பின் அது இரட்சிக்கப்பட்ட நல்ல ஆத்துமாவாக இருந்தால் ஒளியுள்ள பாதையை தேரிந்தெடுக்கும். பாவியான கெட்ட ஆத்துமாவாக இருந்தால் இருளான பாதையை தானாக தேர்ந்த்தெடுக்கும்.

நல்ல ஆத்துமாக்களை தூதர்கள் அழைத்துக் கொண்டு போய் பரலோகில் விடுவார்கள். பாவியான பொல்லாத ஆத்துமாக்களை பொல்லாத ஆவிகள் இழுத்துக் கொண்டு போய் விடும். எல்லா ஆவிகளும் எங்கும் சுற்றித் திரிய அனுமதி இருக்கிறது. பரலோகில் இருக்கும் ஆவிகள் பூலோகம் வர பிரியப்படுகிறதில்லை. பூலோகின் பாவம் அவர்களால் சகித்துக் கொள்ள முடியாது.

சில வகையான ஆவிகள் எங்கும் போக அனுமதி கிடையாது. அவர்கள் ஒரு இடத்தில் தனியே வைக்கப்பட்டு போதிக்கப்பட்டு, பின் பரலோகம் போவார்கள். அவர்கள் யாரெனில்
1. சிறு பிள்ளைகள், குழந்தைகள் - பரலோக காரியங்களை புரிந்து கொள்ளும் வயது வருவதற்கு முன் மரித்தவர்கள்.
2. மன வளர்ச்சி அற்றவர்கள்/மன நோய் உள்ளவர்கள் - இயேசு கிறிஸ்துவைப் பற்றி சொன்னாலும் இவர்களுக்கு புரியாது.
3.ஊமை, குருடு, செவிடர்கள் - இப்படிப்பட்ட உடல் நலக் குறைபாட்டால், ஆண்டவரைப் பற்றி அறிந்து கொள்ளாத முடியாதவர்கள்.
4. ஒரு முறை கூட சுவிசெஷம் கேட்காதவர்கள்/ இயேசு கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்தவர்கள் - இவர்கள் மேசியாவின் வருகைக்காக காத்திருந்த இடம் தான் பரதீசு. ஆபிரகாமின் மடி என்று அழைக்கப்படும் இடம். 1 பேதுரு 3 : 18-22 இல் சொல்லப்பட்ட காவலிலுள்ள ஆவிகள் இவர்களே. இவர்களுக்குத் தான் இயேசு கிறிஸ்து இரட்சிப்பின் செய்தியை சொல்லி, அங்கிருந்து மீட்டு பரலோகம் அனுப்பி வைத்தார்.

0 comments: