Thursday, January 11, 2018

உண்மையாக ஊழியம் செய்ய .....

ஒரு போதகர் நாகரிகத்துக்கு வெகு தொலைவில் அடர்ந்த காட்டின் நடுவே இருந்த ஒரு கிராமத்தில் ஊழியம் செய்து வந்தார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆராதனை நடத்த அவர் 4 மணி நேரம் அடர்ந்த காட்டின் வழியே நடந்து அந்த கிராமத்திற்கு செல்ல வேண்டும், ஆகவே அதிகாலை 4 மணிக்கெல்லாம் அவர் நடக்க ஆரம்பித்து விடுவார்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை அவர் அவ்வாறு நடந்து காட்டின் பாதி தூரம் வந்துகொண்டிருந்த போது பயங்கர இடி இடித்தது, கார்மேகம் சூழ்ந்து கொண்டு பலத்த மழை பெய்யும் போல் தெரிந்தது. உடனே அவர் அங்கேயே முழங்கால்படியிட்டு தான் அந்த கிராமத்தைச் சென்று சேரும்வரை மழையை தடை செய்யும்படியும் தன் போதகர் அங்கி, வேதாகமம் மற்றும் திருவிருந்து பொருட்கள் ஆகியவை நாசமாகாமல் பாதுகாக்கும்படியும் ஐெபித்தார். ஆனால் அவர் ஜெபித்த பின் பயங்கர மழை பொழிந்தது. மழையில் முற்றிலும் நனைந்து அலங்கோலமாக அந்த கிராம ஆலயத்திற்கு எப்படியோ வந்து சேர்ந்தார். ஆராதனை நடத்தி பிரசங்கம் செய்தார், ஆனால் ஆவியிலும் மனதளவிலும் சோர்வோடு. ஏனெனில் தேவன் அவர் ஜெபத்தை கேட்கவில்லை என்பதால்.

அவர் வீடு வந்து சேர்ந்த பின் அவர் சாப்பிடவேயில்லை. ஊழியத்தைத்
தொடர்ந்து செய்வதா அல்லது விட்டுவிடுவதா என்று அவருக்கு ஒரே குழப்பம், காரணம் அவர் ஜெபத்திற்கு பதிலளிக்காத தேவனுக்கு எப்படி ஊழியம்  செய்வது? தன் ஜெபத்திற்கு எந்த பலனும் இல்லை என்றும், தன் ஜெபத்திற்கும் தன் பிரசங்கத்திற்கும் சம்பந்தமில்லை என்றும் நம்பினார்.

இப்படி சோர்ந்து போய் உட்கார்ந்திருந்த போது மூன்று வாலிபர்கள் அவரைப் பார்க்க வந்திருந்தனர். அவர்கள் அவரிடம் "போதகரே ஒரு காரியம் சொல்ல வேண்டும்." என்றனர். போதகர் நிமிர்ந்து உட்கார்ந்து கேட்க ஆரம்பித்தார்.

அவர்கள் அவரிடம் ஒரு பணக்கட்டைக் காண்பித்து, "உங்கள் ஜெபங்களும் பிரசங்கமும் இந்த ஊரிலுள்ள  மந்திரவாதிகள் சூனியக்காரர்கள் மற்றும் ஆவிகள் வணக்கம் செய்பவர்களுக்கும் மிகுந்த தொந்தரவாய் இருந்தபடியால் எங்களுக்கு பணம் கொடுத்து உங்களை கொல்ல சொல்லி அனுப்பினார்கள்.

உங்களை சுட்டுத்தள்ள காட்டுக்குள் காத்திருந்தபோது, இந்த கோடைக்கால மத்தியிலும் எங்கிருந்தோ வந்த பலத்த மழை எங்களையும் எங்கள் துப்பாக்கி பொளடரையும் முற்றிலும் நனைத்துப்போட்டதினால் எங்களால் உங்களை சுட முடியாமல் நீங்கள் அந்த மழையில் காட்டுக்குள் நடந்துபோய்கொண்டிருந்ததையும் பார்த்து கொண்டு தான் இருக்க முடிந்தது. எனவே உங்கள் கடவுள் உயிருள்ளவர் என்பதை அறிந்து அவரை நாங்களும் ஏற்றுக்கொள்ள வந்தோம்" என்றனர்.

இதைக் கேட்டதும் போதகர் கண்ணீரோடு முழங்கால் படியிட்டு
தேவனுக்கு நன்றி செலுத்தி தன் மீதமுள்ள நாளெல்லாம் ஆண்டவருக்கு உண்மையாக
ஊழியம் செய்ய தன்னை மீண்டும் ஒருமுறை அர்ப்பணித்தார்.

0 comments: